இலங்கையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை, இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்டப் போர் நடந்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஐ.நா. சபை ஒரு குழு அமைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் பெருமளவில் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களால், இலங்கை அரசு பல ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொலை செய்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அதே நேரத்தில் புலிகள் பொதுமக்களை , மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறது.
மருத்துவ மனைகள், ஐநா மையங்கள் மற்றும் சர்வதேச உதவிக் குழுவான செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான உதவிக் கப்பல் ஆகியவற்றின் மீதும், இலங்கை அரசுப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஏபி செய்தி நிறுவனத்தை ஆதாராமாக மேற்கோளிட்டு ஐநா காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
இலங்கையில் ஐ.நா.அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதில் இலங்கை அலட்சியமாக இருந்ததும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பத்தாயிரத்திற்கும் மேலான பொதுமக்களை, குண்டுகள் வீசி இலங்கை அரசு கொன்றுள்ளது என்றும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அவர்களின் தலைகள் மீது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், ஏராளமான தமிழ் பெண்கள் வன்புணரப்பட்டு கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐநா சபை விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என இலங்கை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானால் மறுசீரமைப்புப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்நாடு கூறியிருந்தது. இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஐநா ஏற்க மறுத்து விட்டது.
இந்த அறிக்கை தவறானது என்றும் முறைகேடானது என்றும் இலங்கை அரசு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நேரம்
0 comments:
Post a Comment