சென்னை : பால் உற்பத்தியாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பசும்பால் லிட்டருக்கு ரூ.2.50, எருமைப்பால் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராடி வந்தனர். பசும்பாலுக்கு ரூ.1.10 உயர்த்தி லிட்டர் ஒன்றுக்கு ரூ.16.64, எருமைப்பாலுக்கு ரூ.2.20 உயர்த்தி ரூ.25.20 என வழங்குவதாக அரசு அறிவித்தது. அதை ஏற்காமல் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து 8 நாள் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
நேற்று மாலை புதிய தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் முகமது அலி, கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் நல சங்க காப்பாளர் ராஜகோபால், தமிழ்நாடு பணியாளர் சங்க தலைவர் வேலாயுதம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு தரப்பில் தலைமை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் நிர்மலா, ஆவின் மேலாண்மை இயக்குனர் அபூர்வவர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 1.30 மணி நேரம் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டவில்லை. உற்பத்தியாளர்கள் அது பற்றி வெளியே பேட்டி அளிக்கும்போது மீண்டும் பேச அழைக்கப்பட்டனர். ஒரு மணி நேரம் நடந்த பேச்சு சுமுகமாக முடிந்தது. கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதாக அரசு அறிவித்தது. பசும்பாலுக்கு ஏற்கனவே அறிவித்த ரூ.1.10வுடன் மேலும் ரூ.1.36 சேர்த்து ரூ.2.46 உயர்த்தியும் (லிட்டர் ரூ.18) எருமைப்பாலுக்கு ஏற்கனவே அறிவித்த ரூ.2.20வுடன் மேலும் 80 காசு சேர்த்து, ரூ.3 (லிட்டர் ஸி26) வழங்குவதாக அரசு அறிவித்தது. அதை உற்பத்தியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
செங்கோட்டுவேல் கூறியதாவது: சங்க பணியாளர்கள் மற்றும் இதர செலவுகளுக்கு லிட்டருக்கு ரூ.40 காசு அரசு வழங்கி வந்தது. அதை 50 காசு உயர்த்தி பசும்பாலுக்கு 90 பைசா, எருமைப்பாலுக்கு ரூ.1.30 வழங்க முன்வந்துள்ளனர். பணி நிரந்தரம் தொடர்பாக குழு அமைக்க உறுதியளித்துள்ளனர். இனி அரசு பால் பண்ணைகளுக்கு தங்கு தடையின்றி பால் வழங்குவோம். இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார். பின்னர் உற்பத்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியை புதிய தலைமை செயலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்
0 comments:
Post a Comment